பிரதீபா முன் பாஜக - ம.ஜ.தள எம்.எல்.ஏக்கள் இன்று 'பரேட்'
டெல்லி: கர்நாடக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து ஆட்சி அமைக்க தங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி அவர் முன்பு அணிவகுக்கவுள்ளனர்.
பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் நேற்று மாலை பெங்களூரிலிருந்து டெல்லி வந்து சேர்ந்தனர். இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சட்டசபை பாஜக தலைவர் பி.எஸ்.எட்டியூரப்பா சந்தித்தார்.
அப்போது கூறுகையில், சட்டசபையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் பலம் போதுமானது.
அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆளுநரிடம் நேரில் போய் தங்களது ஆதரவைத் தெரிவித்தோம். இருப்பினும் இதுவரை எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவே இல்லை. இதனால்தான் குடியரசுத் தலைவர் முன்பு எங்களது பலத்தைக் காட்ட வந்துள்ளோம் என்றார்.
எட்டியூரப்பாவுடன், மாநில பாஜக தலைவர் சதானந்த கெளடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரும் சேர்ந்து குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு இரு கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கர்நாடக ஆளுநர்:
இதற்கிடையே, டெல்லி வந்துள்ள கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications