தடையை மீற முயன்ற டாக்டர் கிருஷ்ணசாமி கைது
மதுரை: ஜாதிக் கலவரம் நடந்த முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்திற்குத் தடையை மீறிச் செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை போலீஸார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சென்றபோது, ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதில் வேல் கம்பு பாய்ந்து கிருஷ்ணசாமி படுகாயமடைந்தார்.
இதையடுத்து கீழ்க்கண்ணிசேரி, வீராம்பல் உள்ளிட்ட கிராமங்களில் ஜாதிக் கலவரம் வெடித்தது. இதில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வின்சென்ட் சாம்சன் என்கிற ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிைலயில் வின்சென்ட் சாம்சன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற கீழாம்பல் கிராமத்திற்கு வரப் போவதாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்தார்.
ஆனால் போலீஸார் இதற்குத் தடை விதித்து 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர். கிருஷ்ணசாமி வந்தால் பிரச்சினை எழலாம் என்பதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் தடையை மீறி தான் கீழாம்பல் கிராமத்திற்குச் செல்லப் போவதாகவும், கீழ்க்கண்ணிச்சேரி கிராமத்திற்கும் தான் செல்லப் போவதாகவும் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். இதனால் அந்த இரு கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மேலும் மதுரையிலிருந்து இந்த கிராமங்களுக்கு செல்லும் பைபாஸ் சாலையிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணசாமி தனது கட்சி தொண்டர்கள் புடை சூழ மதுரை - விரகனூர் ரிங் ரோடு வழியாக முதுகுளத்தூர் நோக்கி கிளம்பினார். ஆனால் அவர்களை மதுரை மாவட்ட எஸ்.பி. அன்பு தலைமையிலான போலீஸ் குழு மறித்து நிறுத்தியது.
தடை உத்தரவு இருப்பதால் முதுகுளத்தூர் செல்லக் கூடாது என்று அவர்கள் கிருஷ்ணசாமியிடம் கூறினர்.
ஆனால் தடை உத்தரவு சட்ட விரோதமானது, எனவே தான் தொடர்ந்து செல்லப் போவதாக கூறினார் கிருஷ்ணசாமி. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாருடன் கிருஷ்ணசாமி கடுமையாக வாதிட்டார்.
இதையடுத்து கிருஷ்ணசாமியையும், அவருடன் வந்த 75 தொண்டர்களையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு இடத்திற்குக் கொண்டு போய் வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.