சென்னைக்கு வருகிறது மெட்ரோ ரயில்-உருவாகிறது அரியலூர் மாவட்டம்
சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தனி அரியலூர் மாவட்டத்தை உருவாக்கவும், சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்:
பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய அரியலூர் மாவட்டத்தை உருவாக்க இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. புதிய மாவட்டத்துக்கு அரியலூர் தலைமையிடமாக இருக்கும்.
அதில் அரியலூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை ஆகிய வட்டங்கள் இடம் பெறும். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்கள் இடம் பெறும்.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொள்கை அளவிலான அனுமதியை இன்றைய அமைச்சரவைக் கூட்டம் வழங்கியது. டெல்லி மெட்ரோ ரயில் கழகம் தயாரித்து வழங்கியுள்ள திட்ட அறிக்கையின் அடிப்படையில் இரண்டு வழித் தடங்களுடன் இத் திட்டம் அமையும்.
முதலாவது வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், தேனாம்பேட்டை வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும், 2வது வழித்தடம் கோட்டை முதல் அண்ணா நகர், வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரையிலும் அமைக்கப்படும். இதற்கான ஒப்புதல் இன்று அளிக்கப்பட்டது.
இந்த இரு வழித் தடங்களிலும் மொத்தமுள்ள 46.5 கிமீ தூரத்தில் 20 கிமீ நீள தூர மெட்ரோ ரயில் பாதை தரைப் பகுதிக்குக் கீழும் (அண்டர்கிரவுண்ட்), எஞ்சிய தூரம் தரைப் பகுதிக்கு மேலும் (பாலங்கள் மீது) அமையும்.
மாநில மற்றும் மத்திய அரசின் நிதி முதலீட்டுடன் தொடங்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத் திட்டத்துக்கு ரூ. 9,757 கோடி செலவாகும். இதற்காக மத்திய அரசின் நிதியுதவி மற்றும் கடனுதவி கோர முடிவெடுக்கப்பட்டது.
மேலும் இத்திட்டத்திற்கு ஜப்பான் நாட்டின் சர்வதேச வங்கி நிதியுதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 1069.99 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்திடம் வழங்குவதென்றும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.