ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயி கொலை: பதட்டம், போக்குவரத்து நிறுத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன் விரோதத்தில் விவசாயி குத்திக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி கிராமத்தில் உள்ள கீழத்தெரு, இமானுவேல் தெருவில் இரு பிரிவினர் வசித்து வருகின்றனர். இவர்களிடையே அடிக்கடி முன்விரோதம் தொடர்பாக மோதல் மூளும்.
நேற்று மாலை கீழத்தெருவை சேர்ந்த ரமணி (வயது35) இமானுவேல் தெருவை சேர்ந்த விவசாயி செல்லத்துரை (30) ஆகியோர் அங்கு உள்ள டீக் கடைக்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரமணி கத்தியால் செல்லத்துரையை சரமாரியாக குத்தினார். இதில் செல்லத்துரை ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதை அறிந்ததும் இமானுவேல் தெருவில் வசிப்பவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர்.
தகவல் அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சாகுல் அமீது தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அமைதிப்படுத்தினர்.
ஆனாலும் கொலையுண்ட செல்லத்துரையின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். செல்லத்துரையின் உடல் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு செல்லத்துரையின் உறவினர்கள் முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோஷம் போட்டனர்.
இதையடுத்து ரமணி கைது செய்யப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அங்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications