வீட்டு காவலில் பெனாசிர்: முஷாரபுக்கு புஷ் நெருக்கடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிப்ரவரி 15ம் தேதிக்குள் கண்டிப்பாக தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் உடனடியாக அவசர நிலையை விலக்கிக் கொள்ள வேண்டும், ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக வேண்டும், தேர்தலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
மேலும் முஷாரப்பின் செயலுக்கு பாகிஸ்தான் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. சர்வதேச அளவிலும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அமெரிக்க அரசு தனது நிதியுதவியை நிறுத்தி வைக்கும் அபாயமும் எழுந்தது.
இதையடுத்து முஷாரப் தற்போது இறங்கி வந்துள்ளார். தேர்தல் நடத்துவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் பாகிஸ்தானில் தேர்தல் நடத்தப்படும்.
மீண்டும் அதிபராக பதவியேற்றவுடன் ஏற்கனவே கூறியபடி ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்தும் விலகி விடுவேன் என்று முஷாரப் கூறியுள்ளார்.
முஷாரப் - புஷ் பேச்சு:
இதற்கிடையே, அதிபர் ஜார்ஜ் புஷ், முஷாரப்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
மெளன்ட் வெர்னான் பகுதிக்கு வந்துள்ள புஷ் இதுகுறித்துக் கூறுகையில், முஷாரப்புடன் போனில் பேசி விட்டுத்தான் இங்கு வந்துள்ளேன். எனது செய்தியை தெளிவாக அவரிடம் கூறி விட்டேன்.
திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும், கூறியபடி ராணுவ தளபதி பதவியிலிருந்து விலக வேண்டும். இதைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. இதுதான் நான் முஷாரப்பிடம் கூறிய செய்தி.
20 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சின்போது, ராணுவத் தளபதி பதவியில் இருந்துபடி அதிபர் பதவியிலும் நீங்கள் நீடிப்பது சரியல்ல, அது சாத்தியமும் கிடையாது என்றேன்.
அதற்கு முஷாரப் கூறுகையில், அவசர நிலை தற்காலிகமானதுதான். முழு ஜனநாயகம் விரைவில் மலரும். மக்கள் ஆட்சி மீண்டும் உருவாகும் என்று உறுதி அளித்தார் என்றார்.
புஷ், முஷாரப்புடன் பேசியதைத் தொடர்ந்தே தேர்தல் குறித்து முஷாரப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.
வீட்டு காவலில் பெனாசிர்:
இதற்கிடையே பாகிஸ்தானில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.
முஷாரபுக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் வரை பேரணி நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் பெனாசிர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது ஆதரவாளர்கள் 10,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது வீட்டை விட்டு வெளியேறி போராட்ட பேரணியொன்றில் பங்கேற்ற முயன்ற பூட்டோவை போலீசார் வழிமறித்துவிட்டனர். அவரை காரை வழிமறித்த ஆயுதம் தாங்கிய போலீசார் அதை மீண்டும் வீட்டுக்குள் ஓட்டிச் சென்றுவிட்டனர்.
அமைச்சர் வீட்டில் தாக்குதல்- 4 பேர் பலி:
இந் நிலையில் பாகிஸ்தான் அரசியல் விவகாரத்துறை அமைச்சர் அமீர் முகாம் வீட்டில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
பெஷாவர் நகரில் முகாமின் வீடு உள்ளது. இங்கு இன்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதனால் பெஷாவரில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.
முகாம், பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மாகாணத் தலைவராகவும் இருக்கிறார்.
தற்கொலைப் படைத் தாக்குதலில் முகாமின் சகோதரர் படுகாயமடைந்தார். முகாமுக்கு எந்தக் காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications