அமைச்சரவையில் இளைஞர்கள்-கருணாநிதிக்கு விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: தமிழக அமைச்சரவையில் உள்ள வயதான அமைச்சர்களை மாற்றிவிட்டு, இளைஞர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மீனவர்கள் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர். இந் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில்,
நான் திமுகவை குறி வைத்து விமர்சனம் செய்வதாகக் கூறுகின்றனர். யார் ஆட்சியில் இருந்தாலும் குறை சொல்வேன். சமீப காலமாக தமிழக மீனவர்கள் இலங்கை அரசிடம் பிடிபடுவதும், அவர்களால் தாக்கப்படுவதும் தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
1974ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தால் கச்சத் தீவு இலங்கை வசமாகி விட்டது. அந்த கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று கூறவில்லை, அந்தத் தீவுக்கு தமிழக மீனவர்கள் செல்லும் உரிமையை மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள திமுக பெற்று தர வேண்டும். இதனை செய்தால், இலங்கை அரசிடம் தமிழக மீனவர்கள் அடிபட, மிதிபட ேவண்டிய நிலை ஏற்படாது.
கோயம்பேடு மேம்பாலப் பணிக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத என் திருமண மண்டபத்தை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்தனர். இதனை நான் வெளிப்படுத்தியதையடுத்து என் மண்டபம் அருகே 'பில்லர்' அமைத்து, பாலம் கட்டும் வகையில் புதி திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை உருவாக்கி தற்போது செயல்படுத்தி வருகிறது.
என்ன விலை கொடுத்தாலும் என் தைரியத்தை யாராலும் வாங்க முடியாது.எல்லாவற்றையும் ஆண்டு, அனுபவித்துவிட்டு இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று இப்போது சொல்கின்றனர். இதனை 15 ஆண்டுக்கு முன் அவர் சொல்லியிருக்க வேண்டும்.
இப்போதாவது தமிழக அமைச்சரவையில் உள்ள வயதான அமைச்சர்களை மாற்றிவிட்டு, இளைஞர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும்.
புதிய தொழில் கொள்கையால் 20 லட்சம் பேருக்கு நான்கு ஆண்டு கழித்து வேலை கிடைக்கும் என்று சொல்கின்றனர். தமிழகத்தில் இதுவரை எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளன?, அதில் எத்தனை தமிழர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்ற பட்டியலை முதல்வர் வெளியிட தயாரா?.
இவர்கள் ஏதேதோ சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். அணு ஒப்பந்தம் முக்கியமா, அரசு முக்கியமா என்றால், அரசு தான் முக்கியம் என்கிறார். ஆட்சியில் இருந்தால் தான் சம்பாதிக்க முடியும் என்பதால் இப்படி கூறுகிறார். பந்த் அறிவிப்புக்குப் பின் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக பின்வாங்கினர் என்றார் விஜய்காந்த்.