துபாய்-பலியான 5 தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம்
சென்னை: துபாயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்து பலியான 5 தமிழக தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் நஷ்டஈடு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
பலியான 7 இந்தியத் தொழிலாளர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பர்ஜ் துபாயில் உள்ள துபாய் மெரீனா பகுதியில், புதிதாக ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் கட்டுப் பணியில் பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கிரேன் பாலத்தின் மீது மோதியது. இதில் பாலத்தின் ஒரு பகுதி அப்படியே இடிந்து விழுந்தது.
இதில் பாலத்தின் மீது நின்றபடி வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த துயரச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அனைவரும் இந்தியர்கள். இவர்களில் ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் பாட்னா மற்றும் லக்னோவைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ஷாஜகான் (38), தஞ்சை மாவட்டம் ஓரத்தநாட்டைச் சேர்ந்த மதியழகன் (28), திண்டுக்கல் மாவட்டம் மூங்கில்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (21), மற்றும் கோவிந்தன், மோகன லட்சுமணன் ஆகியோர் பலியானவர்கள்.
மற்ற இருவரில் சுரேந்திர சிங் பாட்னாவைச் சேர்ந்தவர். இன்னொருவரான ஜெகதீஷ் லக்னோவைச் சேர்ந்தவர் ஆவார்.
ஷாஜகானுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மரணத்தால் குடும்பத்தினரும், உறவினர்களும், தும்பைப்பட்டி கிராமமும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மதியழகனுக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். பத்து மாதங்களுக்கு முன்புதான் மதியழகன் கட்டுமானப் பணிக்காக துபாய் சென்றுள்ளார். இப்போது மரணமடைந்துள்ள செய்தியால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஓரத்தநாடு அருகே உள்ள காவரப்பட்டுதான் மதியழகனின் சொந்த ஊராகும்.
கார்த்திக் திருமணமாகாத இளைஞர் ஆவார். இவரது பெற்றோரும் குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் அழுதபடி உள்ளனர்.
விபத்துக்கு கிரேன் ஆபரேட்டர் செய்த தவறுதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு துபாய் சட்டப்படி, 120 மாத ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 5 தமிழக தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் நஷ்டஈடு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.