திமுகவுக்கு கொடி பிடிக்க சிறுவர்களா?-சரத்குமார்
சென்னை: திமுகவுக்காக கொடி பிடிப்பதற்கு இளம் சிறார்களையும், பள்ளி மாணவர்களையும் பயன்படுத்தக் கூடாது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி நிறைவேற்றிய தீர்மானத்தில் 15 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை, திமுக இளைஞரணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
15 வயது என்பது ஒரு இளைஞனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற பள்ளி மாணவப் பருவத்தை உள்ளடக்கியது. இந்த பருவத்தில் அரசியல் அறிவு என்பது அத்தியாவசியமாக இருந்தாலும், அவர்களுக்கு கல்வி புகட்டப்படும் பருவமே அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
இந்நிலையில், 15 வயது மாணவர்களை இளைஞர் அணியில் சேர்ப்பது என்பது அவர்களை நம்பியுள்ள பெற்றோர்களின் நம்பிக்கையை அழித்துவிடும்.
இந்த தீர்மானத்தைக் கண்டு பெற்றோர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். திமுக இளைஞரணியின் இந்த செயல், பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்து விடும்.
எனவே, கொடி பிடிப்பதற்கும், கோஷமிடுவதற்கும் ஏதுமறியா இளம் சிறார்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று யோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுகவினரை நான் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications