தேவர் சிலை உடைப்பு: முடிவு தெரியாமல் ஊர் திரும்ப மாட்டேன்-கார்த்திக்
திருநெல்வேலி: வேலாயுதபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பான பிரச்சனைக்கு இறுதியான ஒரு முடிவு தெரியாமல் நான் திரும்ப மாட்டேன் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள வேலாயுதபுரத்தில் கடந்த 4ம் தேதி யாரோ சில சமூக விரோதிகள் அங்குள்ள தேவர் சிலை உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட தேவர் சிலையை பார்க்க நடிகர் கார்த்திக் நேற்று நெல்லை வந்தார். அவர் அங்கிருந்து வேலாயுதபுரம் புறப்படும் நேரத்தில் நெல்லை மாவட்ட போலீசார் கார்த்திக்கை வேலாயுதபுரம் செல்ல தடை விதித்தனர்.
போலீஸ் தடை விதித்தாலும் கார்த்திக் சென்னை திரும்பாமல் நெல்லையில் உள்ள தனியார் விடுதியிலேயே தங்கியுள்ளார்.
அவரைக் காண திரண்ட தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,
நான் என்ன நோக்கத்திற்காக வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும். தற்போதைய பிரச்சனைக்கு போராட்டங்கள் மூலம் தீர்வு கிடைக்காது.
நம்மால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறுகள் ஏற்படக்கூடாது. இந்த பிரச்சனைக்கு இறுதியான ஒரு முடிவு தெரியாமல் நான் ஊர் திரும்ப மாட்டேன். அதற்காக தான் நான் இங்கு முகாமிட்டுள்ளேன் என்றார் கார்த்திக்.












Click it and Unblock the Notifications