4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் திரும்பி வந்த மலைப்பாம்பு
சென்னை: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலைப்பாம்பு திரும்பி வந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகே உள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு நேற்று மாலை ஒரு பெரிய மலைப்பாம்பு மரம் ஒன்றைச் சுற்றி ஊர்வதை பார்வையாளர்களும், பூங்கா ஊழியர்களும் பார்த்தனர்.
இதையடுத்து அந்தப் பாம்பைப் பிடிக்க திருநாவுக்கரசு, மோகன் ஆகிய இரு பூங்கா ஊழியர்களும் முயன்றனர். ஆனால் திருநாவுக்கரசுவை பாம்பு கடித்தது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் சேர்ந்து பாம்பைப் பிடித்தனர்.
பின்னர் திருநாவுக்கரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிடிபட்ட அந்தப் பாம்புக்குப் பின்னால் ஒரு கதையே உள்ளது. இந்த பாம்பு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக இருந்தபோது காணாமல் போய் விட்டதாம். அதைப் பிடிக்க பலமுறை முயன்றும் கூட கண்ணில் சிக்காமல் இருந்து வந்தது.
காணாமல் போன அந்தப் பாம்பு பூங்காவுக்கு அருகே உள்ள காட்டுக்குள் இருந்திருக்கிறது. இப்போது வளர்ந்து ஆளான பின்னர் மீண்டும் பூங்காவுக்குள் வந்தபோது மாட்டிக் கொண்டதாம்.
இது மலேசிய ரெட்டிக்குலேட்டட் வகையைச் சேர்ந்த பாம்பாகும். இதன் உடல் முழுவதும் பட்டை பட்டையாக வளையம் போல இருக்கும். அதிக நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலைப்பாம்பினால் பூங்காவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications