ஓடாத ரயிலுக்கு டிக்கெட்- தென்னக ரயில்வே விநோதம்
திருநெல்வேலி: ஓடாத ரயிலுக்கு டிக்கெட் கொடுத்ததால் சென்னையில் இருந்து குடும்பத்துடன் வந்த தொழிலதிபர் நெல்லை ரயில் நிலையத்தில் பரிதவித்தார்.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியன். இவர் கந்த சஷ்டி விழாவிற்காக குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு வர திட்டமிட்டார். இதற்காக அவர் நெல்லை எக்ஸ்பிரசில் டிக்கெட் எடுக்க சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். டிக்கெட் கவுன்டரில் சென்னை-திருச்செந்தூருக்கு 4 பேருக்கு ரூ. 1,132 பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினார்.
பின்னர் சுப்பிரமணியன் குடும்பத்துடன் நெல்லை எக்ஸ்பிரசில் நேற்று பயணம் செய்தார். ரயிலில் வரும் டிக்கெட் பரிசோதகர்களும் அவரது டிக்கெட்டை பரிசோதித்தனர். அவர்கள் டிக்கெட்டில் உள்ள தவறை கண்டுபிடிக்கவில்லை.
வழக்கம்போல இன்று காலை 8.30 மணிக்கு ரயில் நெல்லை வந்து சேர்ந்தது. ரயிலை விட்டு இறங்கிய சுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருச்செந்தூர் ரயில் எந்த பிளாட்பாரத்தில் நிற்கும் என்று மற்ற பயணிகளிடம் விசாரித்தனர்.
அகல ரயில் பாதை பணிகள் காரணமாக திருச்செந்தூர் ரயில் கடந்த 10 மாதமாக நிறுத்தப்பட்டுள்ளதால் நீங்கள் பஸ்சில் தான் திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் டிக்கெட்டை எடுத்து பார்த்தார். அதில் சேருமிடம் திருச்செந்தூர் என குறிப்பிடப்பட்டு அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் அவர் புகார் தெரிவித்துவிட்டு திருச்செந்தூருக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications