19ம் தேதி கர்நாடக பாஜக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு
பெங்களூர்: கர்நாடகத்தில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு நவம்பர் 23ம் தேதிக்குப் பதில் 19ம் தேதியே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மிக நீண்ட அரசியல் இழுபறிக்குப் பின்னர் எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ளது. எதியூரப்பா தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மை பலத்தை நவம்பர் 23ம் தேதி சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் தற்போது நான்கு நாட்கள் முன்னதாக 19ம் தேதியே
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விவாதிக்க நேற்று முதல்வர் எதியூரப்பா அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நவம்பர் 23ம் தேதிக்குப் பதிலாக 19ம் தேதியே சட்டசபையின் ஒரு நாள் கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் எனது அரசின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படும்.
ஆளுநரின் உத்தரவுப்படி நான்கு நாட்கள் முன்னதாகவே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.