விரைவில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி-அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை அமலாக்க வேண்டும் என கோரி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விஷயத்தி்ல் அரசு வேகம் காட்டவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இந் நிலையில் அமைச்சர் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில,
சமச்சீர் கல்வி என்பது தமிழகத்தில் பயிலும் அனைத்துப்பள்ளி மாணவ-மாணவியரும் ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையில் சமமான தரமான கல்வியை பயிலக்கூடிய வகையில் அமையக் கூடிய கல்வி முறையாகும்.
திமுக தேர்தல் அறிக்கையிலேயே இக்கொள்கை வலியுறுத்தப்பட்டு கழக அரசு அமைந்தவுடன் இதுகுறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்திட ஓய்வு பெற்ற துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது பிரிந்துரையினை அரசுக்கு அளித்தது.
இக்குழுவின் அறிக்கை கடந்த சட்ட பேரவையில் அவையிலே வைக்கப்பட்டுவிட்டது. இந்த பரிந்துரைகளை ஆராய்ந்து அவற்றை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்தும் அரசுக்குத் தெரிவிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
முத்துக்குமரன் குழுவின் அறிக்கையில், மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்ட முறை ஒரு பொதுவான கல்வி அமைப்பின் கீழ் இயங்க வேண்டும் என்றும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்து பள்ளிகளிலும் முழுமையான வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளதால் இது குறித்தும் மாநிலத் திட்டக் குழுவிடம் விரிவாக விவாதிக்கவும் மாநிலத் திட்ட இயக்குநருக்கு அறிவுரை வழங்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை இருந்து வந்துள்ள கல்வி முறையின் அடிப்படையில் பெரும் மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளதாலும் அனைத்துக் கூறுகளையும் அரசு செவ்வனே ஆராய்ந்து தக்கதோர் சமச்சீர் கல்வி முறையினை வடிவமைக்க வேண்டியுள்ளதாலும் கால் அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறதே தவிர சமச்சீர் கல்வி குறித்து தீவிர ஆர்வத்துடன் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது என்பதை உண்மையாகும்.
நடைமுறைச் சிக்கல்கள், எழக்கூடிய சட்டப் பிரச்சனைகளை ஆய்வு செய்து விரைவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க சமச்சீர் கொள்கை உருவாக்கப்பட்டு இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.