நெல்லுக்கு விலை-நவ.27ல் விவசாயிகள் ரயில் மறியல்
திருச்சி: மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 1000 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 27ம் தேதி தமிழகத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.1,000 தரக்கோரி விவசாய சங்கங்கள் அனைத்தும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசோ இதுகுறித்து மவுனம் காத்து வருகிறது.
இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராஜா சிதம்பரம் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.1,000 தரக்கோரி வரும் 27ம் தேதி காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அனைவரும் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
மேலும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.300 கோடி பாக்கி தொகையை உடனடியாக வழங்கக் கோரி அவசரக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications