இலவச வீட்டு மனை பெற இனி வருமான வரம்பு இல்லை
சென்னை: இலவச வீட்டுமனைப் பட்டா பெற வருமான உச்ச வரம்பை முற்றிலுமாக நீக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
வசதியில்லாதோருக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிராமப புறங்களில் ஆண்டு வருமானம் ரூ. 30,000க்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கும், நகர்ப் புறங்களில் ஆண்டு வருமானம் ரூ. 50,000க்கும் குறைவாக உள்ள குடும்பங்களும் தான் இலவச மனைப் பட்டா பெற தகுதி பெற்றவர்கள் என்ற விதி உள்ளது.
இந்த விதிமுறையை நீக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வீட்டு மனைகளின் அளவை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் வரும் மார்ச் மாதத்துக்குள் 3 லட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கருணாநிதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் வருவாய் துறை அமைச்சர் பெரியசாமி, தலைமைச் செயலர் திரிபாதி, நிதித்துறை, வருவாய்த் துறை செயலாளர்கள், நில நிர்வாக ஆணையர் மற்றும் சில மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது இம்மாதம் 10ம் தேதி வரை 2,07,287 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பெற கிராமப் புறங்களில் ஆண்டு வருமானம் ரூ. 30,000 என்றும், நகர்ப் புறங்களில் ஆண்டு வருமானம் ரூ. 50,000 என்றும் வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
அதேபோல கிராமப் புறங்களில் இதுவரை மூன்று சென்ட்டும், நகராட்சிப் பகுதிகளில் ஒன்றரை சென்ட்டும், மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு சென்ட்டும் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டு வருவதை அதிகரிக்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி இனிமேல் கிராமப் புறங்களில் நான்கு சென்ட் வரையும், நகராட்சிப் பகுதிகளில் இரண்டரை சென்ட் வரையிலும், மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டு சென்ட் வரையிலும் இலவசமாக வீட்டுமனைகள் வழங்கப்படும்.
ஏற்கனவே வீட்டுமனைப் பட்டாக்களைப் பெற மனைக்கிரயம் செலுத்தியவர்களுக்கு, அவர்கள் செலுத்திய தொகை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.