செஞ்சியில் தேமுதிக பேனர்கள் கிழிப்பு: நள்ளிரவில் மறியல், பரபரப்பு
செஞ்சி: செஞ்சியில் வைக்கப்பட்டிருந்த தேமுதிகவினரின் பேனர்கள், போஸ்டர்களை யாரோ சில விஷமிகள் கிழித்தெறிந்ததை தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் நள்ளிரவில் சாலை மறியல் செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சியில் தேமுதிக செயலாளரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ளவிருந்தார். அதற்காக அக்கட்சி தொண்டர்கள் நகர் முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் வைத்திருந்தனர்.
செஞ்சி பேருந்து நிலைத்தில் வைத்திருந்த தேமுதிக பேனர்களை நேற்றிரவு யாரோ சில மர்ம நபர்கள் கிழித்தெறிந்து விட்டனர்.
இதனையறிந்த தேமுதிகவின் ஒன்று திரண்டு பேனரை கிழிக்கப்பட்டது கண்டித்து நள்ளிரவு 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டதால் செஞ்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேனரை கிழித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. 30 நிமிடம் நடந்த இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலை மறியல் செய்த செஞ்சி நகர தேமுதிக செயலாளர் பழனி மற்றும் தொண்டர்கள் ராமு, அமீர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மீது தேமுதிகவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேமுதிக பேனரை கிழித்தவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தேமுதிகவினர் கூறினர்.












Click it and Unblock the Notifications