ஜெ. வீட்டருகே கண்காணிப்பு-சோதனை அதிகரிப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்கு அடிக்கடி மர்ம நபர்கள் வந்து பெரும் தலைவலியாகியுள்ளதால், ஜெயலலிதாவின் வீடு உள்ள தெருவில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வழியாக செல்லும் அனைவரையும் நிறுத்தி விசாரித்து விட்டுத்தான் அனுப்புகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீடு போயஸ் தோட்டம் பகுதியில் உள்ளது. இதே பகுதியில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வீடும் உள்ளது.
சமீப காலமாக ஜெயலலிதாவின் வீட்டுக்கு சில மர்ம நபர்கள் அடிக்கடி வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதிலும் ஜோஷ்வா என்ற நபர் ஒரே ஆண்டில் இருமுறை வந்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டதால்தான் இந்த நிலை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் முதல்வர் கருணாநிதி இதை மறுத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார். சென்னை மாநகர காவல்துறையும், தமிழக அரசும் கூட ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமாக தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களில் மட்டும் 4 மர்ம நபர்கள் ஜெயலலிதா வீட்டுக்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்து போனதால் சர்ச்சை பெரிதாகியுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா வீடு உள்ள பகுதியில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து 150 மீட்டர் தூரத்திலேயே போலீஸார் குவிக்கப்பட்டு அந்தப் பகுதி வழியாக வருவோர் மற்றும் வாகனங்களை நிறுத்தி போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதன் மூலம் ஜெயலலிதாவின் வீட்டுக்கு மர்ம நபர்களோ, வாகனங்களோ செல்லாமல் தடுக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று தொடங்கியுள்ள இந்த சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications