For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலி ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்கும் காதலன்

By Staff
Google Oneindia Tamil News

Loveதூத்துக்குடி: தன்னைக் காதலித்த பெண் ஏமாற்றிவிட்டதால், காதலிக்கு செலவழித்த பணத்தைக் கேட்டு காதலன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் தபால்-தந்தி காலனியை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவர் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென்று ஜெபக்குமாரை ஒதுக்க ஆரம்பித்துள்ளார் டாக்டர் காதலி. காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இதுநாள் வரை மனக்கோட்டை கட்டிய ஜெபக்குமாருக்கு தன் காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தன் காதல் கோட்டை தகர்ந்து விடக்கூடாது என்று விடாப்பிடியாக காதலியை தொடர்ந்து ஏன் என்னை விட்டு விலகுகிறாய் என்று கேட்டுள்ளார். ஆனால் டாக்டர் காதலியோ காதலன் ஜெபக்குமாரை தனக்கு யார் என்றே தெரியாது எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனால் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்த பின்னர், இரண்டு பேரும் பேசவோ, சந்திக்கவோ கூடாது என்று கூறி காதலுக்கு முற்று புள்ளி வைத்தனர்.

இதனால் மனம் உடைந்த ஜெபக்குமார், தன்னை ஏமாற்றிய காதலிக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். அதனையடுத்து அவர் தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் காதலிக்காக தான் செலவழித்த பணத்தை வாங்கி கொடுக்கும்படியும், தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நஷ்ட ஈடு தரும்படியும் நவீன புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் ஜெபக்குமார் கூறியிருப்பதாவது,

நான் விளம்பர ஏஜென்டாக தொழில் செய்து வருகிறேன். பிரதிவாதியான என் காதலி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். சுமார் இரண்டு வருடங்களாக எனக்கும், அவருக்கும் நல்ல பழக்கம் இருந்து வந்தது. அதன் மூலம் என்னை அவர் காதலிப்பதாக கூறி நல்ல உறவு வைத்திருந்தார்.

அப்போது நான் அவருக்கு தேவையான பொருட்கள், செல்போன், தங்கநகை, வெள்ளி பொருட்கள், கொலுசு, மோதிரம், சேலை, சுடிதார், செருப்பு மற்றும் கல்வி சம்பந்தமாக பணம், விடுதிக்கு தேவையான பணம் அனைத்தையும் கொடுத்தேன்.

மேலும் வெளியே செல்லும் போது ஆட்டோ, ஹோட்டலில் சாப்பாடு செலவு செய்து வந்தேன். நிலைமை இப்படி இருக்க அவர் என்மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசில் பொய்யான தகவல்களை கூறி புகார் செய்தார்.

அப்போது நான் கொடுத்த பொருட்களை அவர் திருப்பி தரவில்லை. மேலும் இந்த சம்பவத்தின் போது காவல்துறையினர் என்னை வீட்டில் இருந்து அழைத்து வந்தது, உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.

என் பெயரை கூறி அவர் வாங்கிய கடனுக்கு பணம் கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் என்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டனர். இதனால் எனக்கு மன வேதனையும் மன உழைச்சலும் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி அவர் எனக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்தார். மீண்டும் என் மீது பொய் புகார் கொடுத்தார்.

இதனால் எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். எனக்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்கு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பனேன். அதற்கு அவர் பதில் தரவில்லை. எனவே எனக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு இந்த வழக்கை தாக்கல் செய்வதாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

காதலன் ஏமாற்றி மோசடி செய்து விட்டான் என்று காதலி புகார் கூறி வரும் வேளையில், காதலி ஏமாற்றியதற்காக காதலன் நஷ்ட ஈடு கேட்கும் இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X