வங்கதேசத்தைத் தாக்கியது சிதர் புயல் - 328 பேர் பலி
டாக்கா: மேற்கு வங்கத்தையும், ஒரிசாவையும் மிரட்டி வந்த சிதர் புயல் நேற்று நள்ளிரவில் வங்கதேசத்தில் கரையைக் கடந்தது. புயலுக்கு 328 பேர் பலியாகியுள்ளனர். கடலோரப் பகுதி முழுவதும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான அதி தீவிர புயலான சிதர், கடந்த சில நாட்களாக அந்தமான், மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய பகுதிகளை மிரட்டி வந்தது. மிக சக்தி வாய்ந்த இந்தப் புயல் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்ததால், புயல் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
புயல் தாக்கினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை சமாளிக்கத் தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவுவாக்கில் மேற்கு வங்க மாநிலத்திற்கும், ஒரிசாவுக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த மாநிலங்களைத் தாக்காமல் வங்கதேசத்தில் புயல் கரையைக் கடந்தது. வங்கதேசத்தின் தென் மேற்கு கடலோரப் பகுதியில், சுந்தரவனக் காடுகள் உள்ள பகுதியில், பலத்த சூறாவளிக் காற்றுடன் புயல் கரையைக் கடந்தது.
புயல் தாக்கியபோது, மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. பேய் மழையும் பெய்தது. புயலால் பாகேர்ஹாட் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதுதவிர கடலோர வங்க தேச மாவட்டங்கள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
புயல் தாக்கியதால் பல குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதமடைந்து விட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் அடியோடு பெயர்த்தெறியப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
328 பேர் பலி:
புயலுக்கு இதுவரை 328 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் உயிர்ச் சேதம் அதிகம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பரிசால், பாகேர்ஹாட், போலா, சத்கிரா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசால் மாவட்டத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீடுகள் இடிந்தும், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டும் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து போயுள்ளன. எங்கு பார்த்தாலும் பெயர்த்தெறியப்பட்ட மரங்களாக உள்ளன.
காக்ஸ் பஜார் பகுதியில் 12 மீனவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விட்டனர்.
கடலோர மாவட்டங்கள் முழுவதிலும் கடல் நீர் பல அடி தூரத்திற்கு உள்ளே புகுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.