கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 13 கைதிகள் அப்பீல்
சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மேல் முறையீடு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.
இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் முதலில் விடுதலை செய்யப்பட்டனர்.
அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் சிலருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டன.
அபுதாகீர், அப்பாஸ், இப்ராகிம் அப்துல் ரகுமான், அஷ்ரப், சாகுல் அமீது, முகமது ரபீக், அப்துல் வகாப், அப்துல் கரீம், அப்துல் பாரூக், சர்தாஜ், ஜாகீர், பக்ரூதீன் அலி அகமது ஆகிய 13 பேருக்கு தலா 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது 13 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களது மனுவில், நாங்கள் 10 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டோம். எனவே எங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications