வங்கதேச புயல் பலி 1100 ஆனது
டாக்கா: வங்கதேசத்தை சிதறடித்துள்ள சிதர் புயலுக்கு இதுவரை 1100 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணககானோரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதர் புயலால் வங்கதேசத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. சுற்றியடித்த சூறாவளிப் புயலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுவரை 1100 பேர் புயலுக்கு உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை.
புயல் தாக்கிய பகுதிகளில் பல தொலை தூர தீவுகள் இருப்பதால் அங்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை.
பர்குணா, பிரோஜ்பூர், ஜல்காத்தி ஆகிய மாவட்டங்கள்தான் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் தாக்கிய பகுதிகளில் இன்னும் மின் விநியோகம், தகவல் தொடர்பும் சுத்தமாக இல்லை. இருப்பினும் மீட்புப் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
பாகேர்ஹட் மாவட்டத்தில் உள்ள துல்பர்ச்சார் தீவில் 5000 மீனவர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்தத் தீவுக்கும் நாட்டின் இதர பகுதிகளுக்கும் இடையே கடந்த புதன்கிழமை முதல் தகவல் தொடர்பு சுத்தமாக இல்லை. எனவே அந்த மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அந்தத் தீவுக்கும் செல்ல முடியாத அளவுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
புயல் காரணமாக இயங்காமல் இருந்த சிட்டகாங் துறைமுகம் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் டாக்காவிலும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.












Click it and Unblock the Notifications