மிரட்டி மாமூல் வசூல்: எஸ்.ஐ மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
வத்தலகுண்டு: மிரட்டி மாமூல் வசூல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ராமசந்திரன். இவர் கடந்த 2004ம் ஆண்டு புதுப்பட்டி கணேசன் என்பவரை இரவில் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளார்.
விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து செல்லாமல் இளநீர்கடை பிரிவு என்ற இடத்தில் வாகனத்தை நிறுத்தி வத்தலகுண்டில் உள்ள ஒரு கடையில் ரூ. 19,000யை திருடியதாக ஒப்புக்கொள்ளவேண்டும் என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
பயந்து போன கணேசன் தனது தம்பிடம் பணம் வாங்கி எஸ்.ஐ.யிடம் கொடுத்துள்ளார்.
மிரட்டியவுடன் பணத்தை கொடுத்ததால் மேலும் பணம் கேட்டு அவரை எஸ்.ஐ தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து கணேசன் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பியிடம் புகார் செய்துள்ளார். ஆனால் இந்த புகார் மீது திண்டுக்கல் எஸ்.பி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் ராஜாராம் , எஸ்.ஐ ராமசந்திரன் மீது வழக்குப் பதிவு செய்தார்.
தற்போது ராமசந்திரன் திருநெல்வேலி பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.