அமெரிக்காவில் திருச்சி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
சென்னை: அமெரிக்காவில் கணவரால் காரில் இருந்து தள்ளிவிடப்பட்டு கோமா நிலைக்குச் சென்றுள்ளார் திருச்சியைச் சேர்ந்த பெண்.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் மெக்ளின் ஜெனிதா (26).
இவருக்கும் திருச்சி அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்த சாப்டேவ்ர் என்ஜீனியரான கிறிஸ்டி டேனியலுக்கும் (28) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
டேனியல் அமெரிக்காவில் உள்ள முன்னணி இந்திய சாப்ட்வேர் நிறுவனத்தின் கிளையில் பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்த 1 வாரத்தில் அமெரிக்கா சென்ற டேனியல் 6 மாதங்களுக்கு பிறகு மனைவி ஜெனிதா, தனது தாய் மற்றும் அக்கா ஆகியோரையும் அமெரிக்காவுக்கு அழைத்து சென்றார்.
மகள் அமெரிக்காவில் இருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்த ஜெனிதாவின் பெற்றோருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஒரு தகவல் வந்தது.
ஜெனிதா கார் விபத்தில் சிக்கி கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக டேனியல் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தோணிசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மகளை இந்தியா அழைத்து வருவதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.
அங்கு சென்ற அவர்கள் கோமா நிலையில் இருந்த மகளை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். சில தினங்கள் அங்கிருந்து ஜெனிதாவை பார்த்து கவனித்து வந்தனர். இந்நிலையில் கோமாவில் இருந்து சுயநினைவு திரும்பிய ஜெனிதா, தன்னை கணவர் காரிலிருந்து தள்ளி விட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்ட ஜெனிதாவின் பெற்றோர் மகளை தொடர்ந்து அமெரிக்காவில் வைத்து சிகிச்சையளிப்பது கடினம் என்று கருதி இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர்.
சென்னைக்குஜெனிதா ஸ்டிரெச்சரில் வந்ததை பார்த்து அவரின் உறவினர்கள் கதறியழுதனர்.
ஜெனிதாவுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவரின் தந்தை அந்தோணிசாமி கூறியதாவது,
மருமகன் டேனியல், என் மகளை அமெரிக்கா அழைத்து சென்ற பின்னர் கொடுமைபடுத்தியுள்ளார். எனது மகளிடம் பேசுவதே இல்லையாம்.
அமெரிக்கா சென்ற பின்னர் அவர்கள் செய்யும் கொடுமை குறித்து எனக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பினாள். பொறுத்துக்கொள், எல்லாம் போக போக சரியாகிவிடும் என்று சமாதானம் செய்தேன்.
ஆனால் என் மகளை அடித்து துன்புறுத்தி ஓடும் காரிலிருந்து கீழே தள்ளியிருக்கிறார்கள். இதனால்தான் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு என் மகள் சென்றுவிட்டார் என்றார்.
ஜெனிதா நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications