தமிழர்களை ஏமாற்ற கவிதை எழுதுகிறார்கள்-வைகோ
திருச்சி: உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்காக சிலர் கவிதை எழுதுகிறார்கள் என்று முதல்வர் கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக தாக்கினார்.
திருச்சியில் நநடந்த மதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில்,
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை காக்க திமுக அரசு தவறிவிட்டது. மத்திய அரசும் தமிழக நலனை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் நடவடிக்கையையும் கண்டித்தும், கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் டிசம்பர் 7ம் தேதியன்று எனது தலைமையில் மதுரையிலும், பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் ஆந்திரா அரசு மற்றும் அதைத் தடுக்கத் தவறிய தமிழக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து டிசம்பர் 1ம் தேதியன்று வேலூரிலும் உண்ணாவிரதம் நடக்கவிருக்கிறது.
பிப்ரவரி 23ம் தேதி மதுரையில் மதிமுகவின் மண்டல மாநாடு நடத்தப்படும்.
தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் துணிச்சலாக அரங்கேறி வருகின்றன. திமுக அரசு பதவிக்கு வந்த பின்னர், படுகொலை அன்றாட நிகழ்வாகிவிட்டது. போலீசாரின் கைககள் கட்டப்பட்டுள்ளன. கொலைக் களமாக தமிழகம் உருவாகி வருவதற்கு முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்தில் மின்தடை இல்லை என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பொய் சொல்கிறார். அரிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதிலும் மணல் கொள்ளையில் ஆளுங்கட்சி, ஊழலின் சிகரமாக செயல்படுகிறது.
மத்திய அரசு கொள்கையால் விவசாயிகள் நலன் புறக்கணிக்கப்படுகிறது. அதன் விளைவால் தான் நந்திகிராம் பிரச்சனை. தொழிலாளர் தோழன் எனக்கூறும் மார்க்சிஸ்ட்கள் ஆளும் மேற்குவங்கத்தில், அடக்குமுறை பிரவேசம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் விவகாரத்தில் உறுதியாக இருந்து வந்துள்ளோம். கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே கொள்கையுடையவையாக இருப்பதில்லை. ஈழப் பிரச்சனையில் அதிமுக நிலைப்பாடும், எங்களது நிலைப்பாடும் மாறுபட்டதாயிற்றே என ஜெயலலிதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த அவர் காங்கிரஸ், பாஜகவுடன் மதிமுக உறவு வைத்தபோது ஏன் இந்த கேள்வியை கேட்கவில்லை என்றார். எனவே கூட்டணி கட்சிகள் கொள்கையில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தியா-இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்யவிருந்த முடிவினை அப்போது மதிமுகவை தவிர எந்தவொரு கட்சியும் எதிர்க்கவில்லை. உலகில் உள்ள தமிழர்களை ஏமாற்ற கவிதை எழுதுகிறவர்கள் இதற்கு நடவடிக்கை எடுத்தார்களா. இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிக்கக் கூடாது.
தமிழகத்தில் நடக்கும் ஜனநாயக விரோத ஆட்சியை எதிர்த்து மக்கள் சக்தியை திரட்டும் பணியை மேற்கொள்ளவுள்ளோம். அதிமுகவுடனான எங்கள் உறவு வலுவுடன் தொடரும். 3வது அணி விஷயத்தில் அதிமுக நிலைப்பாடு, அணுகுமுறை என்னவோ அதுதான் எங்களது நிலைப்பாடு.
பாலக்காடு கோட்டத்தில் இணைக்கப்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியை மதுரை கோட்டத்தில் சேர்க்கும்வரை ஓய மாட்டோம். இதேபோல் கன்னியாகுமரி, நெல்லையையும் மதுரை கோட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications