தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய 5 அரசு ஊழியர்கள் கைது
புளியங்குடி: கணவர், மனைவி ஆகியோரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் புளியங்குடி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். சுப்பிரமணியன் புளியங்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
சொந்த வீடு கட்ட ஆசை தன்னுடம் வேலை பார்க்கும் சக ஊழியர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார் சுப்ரமணியன்.
வாங்கிய பணத்திற்கு ஆரம்பத்தில் சரியான முறையில் வட்டியை கொடுத்த சுப்பிரமணியனால் தொடர்ந்து வட்டிப் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் வட்டிக்கு கடன் கொடுத்த சக ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இவர்களது மிரட்டலால் தவித்த சுப்பிரமணியன் தனது மனைவியுடன் கடந்த செப்டம்பர் 3ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஓய்வு பெற்ற செக்கிங் இன்ஸ்பெக்டர் பிச்சையா, கண்டக்டர் சுப்பிரமணியன், டிரைவர்கள் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், காவலாளி ராமையா ஆகியோரை கைது செய்தனர்.