சென்னை பள்ளியில் பேய் புரளி
சென்னை: வகுப்பறையில் பேய் இருப்பதாக புரளி கிளம்பியதையடுத்து இன்று அந்தப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இந்தப் பள்ளியில் கடந்த சில நாட்களாக பேய் உலா வருவதாக பெரும் பீதி கிளம்பியது.
4 தினங்களுக்கு முன்னர் வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்த 2 மாணவிகள் சத்தம் போட்டனர். ஆசிரியர் என்ன சத்தம் என்று விசாரித்ததில், தங்களது முதுகில் யாரோ கை வைத்தது போலிருந்தது என்று கூறியுள்ளனர்.
தினமும் இதுபோல் மாணவிகள் அலறியதால் இரு தினங்களுக்கு முன்னர் பாதிரியாரை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் ஜெபம் செய்தனர். ஆனால் அலறல் சத்தம் நிற்கவில்லை.
இந் நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் இன்று காலை பள்ளி நிர்வாகத்திடம் வந்து இது குறித்து முறையிட முயன்றனர். ஆனால், பேயல்லாம் இல்லை. இது புரளி. இது குறித்தெல்லாம் பேச முடியாது என நிர்வாகத்தினர் கூறிவிட்டனர்.
ஆனாலும் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு தகராறு செய்யவே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.