முழு வீச்சில் திமுக இளைஞரணி மாநாட்டுப் பணிகள்
திருநெல்வேலி: நெல்லையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் திமுக இளைஞரணி மாநில மாநாட்டைத் தொடர்ந்து தமிழக அரசியலில் குறிப்பாக திமுகவில் மிகப் பெரிய மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்குப் பின் ஸ்டாலின் துணை முதல்வர் பதவியிலோ அல்லது முதல்வர் பதவியிலோ கூட அமர்த்தப்படலாம் என யூகங்கள் கிளம்பியுள்ளன.
நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடக்கிறது. பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் மாநாட்டிற்கு பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரு நாட்கள் நடக்கும் மாநாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டில் ஏராளமான இளைஞர்களை பங்கேற்கச் செய்ய தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றி வந்து திமுக இளைஞரணியினரின் கூட்டங்களை நடத்தி வருகிறார் அமைச்சர் ஸ்டாலின்.
நெல்லைக்கு ஆய்வு பணி மேற்கொள்ள வரும் அமைச்சர்கள் மாநாட்டு பணிகளையும் அப்படியே பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாவட்ட திமுக பொறுப்பாளர் கருப்பாசாமி பாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநாட்டு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.
மாநாட்டு பந்தலை சுற்றி அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்படும் பந்தோபஸ்து ஏற்பாடுகள் குறித்து போலீசார் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகளும் மாநாட்டு திடலை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications