இந்தியாவுக்கு வரும் பஹ்ரைன் ஏர் விமான சேவை
துபாய்: பஹ்ரைன் நாட்டின் முதல் தனியார், குறைந்த கட்டண விமான நிறுவனமான பஹ்ரைன் ஏர், ஜனவரி 17ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் தனது சேவையை அது மேற்கொள்ளவுள்ளது.
தனியாரால் தொடங்கப்படும் பஹ்ரைன் ஏர் நிறுவனம், பஹ்ரைனின் முதலாவது தனியார், குறைந்த கட்டண விமான நிறுவனமாகும். ஜனவரி 17ம் தேதி முதல் இந்த நிறுவனம் தனது சேவையை தொடங்குகிறது.
முதல் கட்டமாக துபாய், மஷாத், பெய்ரூட், அலெக்சாண்ட்ரா ஆகிய நகரங்களுக்கு இந்த நிறுவனத்தின் விமானங்கள் பறக்கவுள்ளன. அதன் பின்னர் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக் கண்டத்திற்கும் சேவை விரிவுபடுத்தப்படும்.
மேலும் பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தை, மிகப் பெரிய விமான மையமாக மாற்றவும் பஹ்ரைன் ஏர் பாடுபடும். பஹ்ரைனில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இந்த நிறுவனம் முயற்சிக்கும் என்று இந்த நிறுவனத்தின் தலைவர் ஷேக் முகம்மது பின் அப்துல்லா அல் கலிபா கூறியுள்ளார்.
தொடக்கத்தில் வளைகுடா பிராந்தியத்தில் 13 நகரங்களில் தினசரி 140 விமான சேவையுடன் இந்த நிறுவனம் செயல்படும்.
பஹ்ரைன் மற்றும் சவூதியைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் சிலரின் கூட்டு பங்களிப்புடன் இந்த விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் மாதந்தோறும் 10 ஆயிரம் பயணிகள், குறைந்த கட்டண விமானங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களை தங்களது டார்கெட் ஆக பஹ்ரைன் ஏர் குறி வைத்து களம் இறங்குகிறது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் பஹ்ரைன் ஏர் 14 விமானங்களை வாங்கவுள்ளது. 2009ம் ஆண்டுக்குள் 23 விமானங்களாகவும், 2010ம் ஆண்டுக்குள் அதை 25 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவு டிசம்பர் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. துபாய், பெய்ரூட், மஷாத், அலெக்சாண்ட்ரா ஆகிய நகரங்களுக்கான டிக்கெட் முன்பதிவை அன்று முதல் மேற்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications