ஷெரீப் நாளை நாடு திரும்புகிறார்: மனைவி
இஸ்லாமாபாத்: இருமுறை பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சவூதியிலிருந்து நாளை மாலை நாடு திரும்பவுள்ளதாக அவரது மனைவி குல்சூம் நவாஸ் கூறியுள்ளார்.
முஷாரப் ராணுவப் புரட்சியின் மூலம் நவாஸ்ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து அதிபர் பதவிக்கு வந்ததும், சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் ஷெரீப். அதன் பின்னர் எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் நாடு திரும்பினார்.
ஆனால் விமான நிலையத்தோடு அவரை நிறுத்திய முஷாரப் அரசு, அங்கிருந்து மீண்டும் சவூதிக்கு நாடு கடத்தி விட்டது.
இந்த நிலையில் இன்னொரு முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோ சமீபத்தில் நாடு திரும்பினார். அவர் திரும்பிய சில வாரங்களில் பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு அதிரடி சம்பவங்களும் அரங்கேறின.
இந்தச் சூழ்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப ஷெரீப் முடிவு செய்துள்ளார். அவர் நாளை மாலை பாகிஸ்தான் திரும்புவதாக ஷெரீப்பின் மனைவி குல்சும் கூறியுள்ளார்.
நேற்று நவாஸ் ஷெரீப்புக்கு சவூதி மன்னர் அப்துல்லா, ரியாத் நகரில் இரவு விருந்து அளித்தார். இந்த விருந்துக்குப் பின்னர் சவூதியிலிருந்து ஷெரீப் பாகிஸ்தான் கிளம்பவுள்ளதாக அவரது மனைவி தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தத் தகவலை உறுதி செய்து ஷெரீப்பின் தம்பி சபாஷ் ஷெரீப், லண்டன் டிவி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நாளை ஜெட்டாவுக்கு தனது கணவருடன் செல்வதாகவும், அங்கிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பவுள்ளதாகவும் குல்சும் கூறியுள்ளார்.
ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவதாக வெளியாகியுள்ள தகவலால் பாகிஸ்தானில் மறுபடியும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.