இளங்கோவன் கொடும்பாவியை தூக்கிலிட்டுப் போராட்டம்
சேலம்: முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவ பொம்மையை தூக்கில் தொங்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபிச்செட்டிபாளையத்தில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் இளங்கோவன், முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மேலும் தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து வைத்துள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் ஆவேசத்துடன் பேசினார்.
இதையடுத்து கோபியில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உருவ பேனர்களை கிழித்தெறிந்தனர். தமிழ்ச்செல்வன் பேனரை கிழித்த காங்கிரசாரை கண்டித்து ஈரோட்டில் பெரியார் திக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு ஈரோடு நான்கு ரோடு சந்திப்பில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவ பொம்மையை கட்டி தொங்க விட்டிருந்தனர்.
இதைக் கண்டித்த ஈரோடு காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தவிர கோபிச்செட்டி பாளையத்தில் இளங்கோவனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால் ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் இன்று காலை சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் எதிரே உள்ள கொடிக்கம்பத்தில் சிலர் இளங்கோவனின் உருவ பொம்மையை தமிழின துரோகி என்று எழுதி தூக்கில் தொங்விட்டிருந்தனர்.
தகவல் தெரிந்ததும், சேலம் டவுன் போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர். சேலம் காங்கிரஸ் அலுவலகத்துக்கும் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் உருவபொம்மையை தூக்கில் போட்டது யாரென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளங்கோவனின் உருவபொம்மை பிரச்சனையால் ஈரோடு, சேலம் மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.