மயூரா ஜெயக்குமார் தாக்குதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கடந்த 11ம் தேதி மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக நுழைந்து தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டியது.
இந்த சம்பவத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ. உட்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில் காங்கிரஸ் கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ், மோகன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள விஷ்ணுபிரசாத் 2 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தனிப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், மேலும் ஒருவர் சிக்கியுள்ளார். அவரது பெயர் ஸ்ரீகண்டன் என்கிற கோடம்பாக்கம் ஸ்ரீ (35).
ஸ்ரீ, தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். கைது செய்யப்பட்ட இவரை தனிப்படை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனையடுத்து ஸ்ரீ புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் விஷ்ணுபிரசாத் மீது எந்தத் தவறும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் 3 நபர் விசாரணைக் குழு ஏற்கனவே கூறி விட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications