குஜராத்தில் வந்து தங்க தஸ்லிமாவுக்கு மோடி அழைப்பு
போடாத் (குஜராத்): வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், குஜராத்தில் வந்து தங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டம், போடாத் நகரில் பாஜகவின் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை இன்று மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தஸ்லிமா நஸ்ரின் குஜராத்தில் வந்து தங்கலாம். அவருக்கு நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாக அழைப்பு விடுக்கிறேன். இங்கிருந்தபடி அவர் இலக்கியத்திற்கும், மனிதகுலத்திற்கும் சேவையாற்றலாம்.
சோனியா காந்தியின் கூட்டாளிகள், தஸ்லிமாவை மேற்கு வங்கத்திலிருந்து விரட்டியடித்துள்ளனர். அவரை நாட்டே விட்டே விரட்ட மத்திய அரசு முயன்று வருகிறது. ஆனால் அடிப்படைவாதிகளை எதிர்த்துப் பேசும் துணிச்சல் கொண்டவர் தஸ்லிமா.
அவரைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள மத்திய அரசுக்கு முடியாவிட்டால், பேசாமல் அவரை குஜராத்திற்கு அனுப்பி வைக்கட்டும். நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம் என்றார் மோடி.