For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசிய தமிழர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மலேசியாவில் அமைதியான முறையில் போராடிய தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்திருப்பதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத் தலையிட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் கணிசமான அளவில் வசித்து வருகிறார்கள். இங்கிலாந்தால் இவர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். தற்போது மலேசிய குடிமக்களாக அங்கு வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.

மலேசிய குடிமக்களாக இருந்தாலும் கூட மலேய மக்களுக்கு நிகராக இந்தியர்கள் நடத்தப்படுவதில்லை. இதனால் கிட்டத்தட்ட 2ம் தர குடிமக்களாகவே இதுவரை நடத்தப்பட்டு வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இவர்களுக்கு மலேய மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், உரிமைகள் அளிக்கப்படுவதில்லை.

இதைக் கண்டித்தும், தங்களது நிலைக்குக் காரணமாக இங்கிலாந்து அரசைக் கண்டித்தும், இங்கிலாந்து தூதரகத்தில் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது கடந்த 25ம் தேதி மலேசிய போலீஸார் மிக்க கடுமையாக நடந்து கொண்டனர். தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், பெண்களையும் அடித்தும் அராஜகமாக நடந்து கொண்டனர்.

மேலும், 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர்.

மலேசிய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக கட்சிகள் பல கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், கோலாலம்பூர் நகரில் கடந்த 25ம் தேதி தமிழர்கள் மீது மலேசிய போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் எனக்கு மிகவும் மனவேதனையை அளித்துள்ளது.

மலேசியாவில் சிறுபான்மை இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதையும் எதிர்த்து கோலாலம்பூரில் தமிழர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது தாங்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். பேரணி நடத்தியவர்கள் மகாத்மா காந்தியின் படங்களை கையில் சுமந்து சென்று சம உரிமை கேட்டு அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தினர்.

ஆனால் போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும், தாக்குதல் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர். இதில் 240க்கும் மேற்பட்ட இந்தியர்களையும் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூரில் நடந்த இந்த தாக்குதலை அறிந்து தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள். மலேசியாவில் வாழும் தமிழர்கள் நீண்ட காலமாகவே இன்னல் படுத்தப்படுகிறார்கள் என்பதையும், எனது மனக் கவலையையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசியாவில் உள்ள தமிழர்களின் இன்னல்களுக்கு தீர்வு காண நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X