ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளிகள் கைது
நாகை: நாகை மாவட்டத்தில் போலீஸார் மேற்கொண்ட ரவடிகள் வேட்டையில் பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளிகள் உள்ளஇட்ட 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீஸார் ரவுடிகளை வேட்டையாடி வருகின்றனர்.
நாகை மாவட்டத்திலும் மாவட்ட எஸ்.பி. கல்பனா நாயக்கின் நேரடி மேற்பார்வையில், ரவுடிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
நாகை டிஎஸ்பி குணசேகரன், மயிலாடுதுறை டிஎஸ்பி மாணிக்கவாசகம், சீர்காழி டிஎஸ்பி மலைசாமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரவுடிகளை வளைத்து வளைத்துக் கைது செய்து வருகின்றனர்.
இரவு பகலாக போலீசார் நடத்திய வேட்டையில் நாகையில் 13 பேரும், மயிலாடுதுறையில் 24 பேரும், சீர்காழியில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 20 பேர் மணல்மேடு சங்கரின் கூட்டாளிகள் என்பது குறிப்பிடதக்கது.