விடுதலை சிறுத்தைகள், புரட்சி புலிகள் தொண்டர்கள் மோதல்
கோவை: கோவை மாவட்டம், பல்லடத்தில், விடுதலைச் சிறுத்தைள் மற்றும் புரட்சிப் புலிகள் ஆகியவற்றின் தொண்டர்கள் மோதிக் கொண்டனர்.
அருந்ததியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு கண்டணம் தெரிவித்து புரட்சி புலிகள் என்ற அமைப்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தியது.
பல்லடத்தில் இந்த அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியபோது அங்கு திடீர் என வந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் புரட்சி புலிகள் இயக்கத்தினர் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் புகுந்து அவர்களை தாக்கவும் முயற்சித்தனர். இதனால் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. அதனால் பதட்டம் உருவானது. பஸ் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செய்தனர்.