காயல்பட்டிணம் நகராட்சித் தலைவர் திடீர் ராஜினாமா
காயல்பட்டிணம்: காயல்பட்டிணம் நகராட்சி கூட்டத்தில் நகராட்சித் தலைவர் திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் பாதியில் முடிந்தது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சதகதுல்லா, நிர்வாக அதிகாரி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் காசிராஜன், கணேசன்பால்ராஜ், ரங்கநாதன் உள்பட பலர் எழுந்து,
ரோடு வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, கிணறுகள் தூர் வாருதல் ஆகிய பணிகள் குறித்து நாங்கள் கொடுத்த கோரிக்கைகளை ஏன் அெஜன்டாவில் சேர்க்கவில்லை.
கடந்த 10 தினங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியிடம் அனுமதி கேட்டு அவரை சந்திக்க சென்றோம். அப்போது நகராட்சித் தலைவர் வராததால் மத்திய அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்து விட்டார்.
இதனால் எம்.பி உள்ளுர் மேம்பாட்டு நிதியை வளர்ச்சி பணிகளுக்கு பெற முடியவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த நகராட்சித் தலைவர் வாவு செய்யது அப்துல் ரகுமான் சொந்த காரணங்களுக்காக தனது தலைவர் பதவியை ராஜினமா செய்வதாக கடிதம் எழுதி அதை நிர்வாக அதிகாரி சுந்தரத்திடம் கொடுத்தார். நகராட்சித் தலைவரின் இந்த திடீர் ராஜினாமா முடிவை கவுன்சிலர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து எந்த முடிவும் எடுக்காமல் நகராட்சி கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
நகராட்சித் தலைவரின் ராஜினமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பது குறித்து எதையும் நிர்வாக அதிகாரி தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications