வெடிகுண்டு டென்சனில் சென்னை கே.கே. நகர்: பள்ளிகளுக்கு விடுமுறை

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வாபஸ் பெற வேண்டும், அவர்கள் இந்தியாவில் தங்கி இருக்க கூடாது என யாரோ சிலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதை மீறினால் 24ம் தேதி (இன்று) சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இன்று குண்டு வெடிக்கும் என்று மிரட்டப்பட்டிருந்தது. சென்னையில் குறிப்பாக கே.கே.நகர் பகுதியில் குண்டு வெடிக்கும் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கே.கே.நகரின் முக்கிய இடங்களை போலீசார் பட்டியலிட்டனர். இந்தப் பகுதியில் முக்கிய மத வழிபாட்டு தலங்களோ, பெரிய நிறுவனங்களோ, ரயில்-பஸ் நிலையங்களோ, வர்த்தக வளாகங்களோ, தொழிற்சாலைகளோ இல்லை என்றாலும் முக்கிய அரசு அதிகாரிகள், சில சிபிஐ அதிகாரிகளின் வீடுகள், விவிஐபிக்களின் வீடுகள் உள்ளன.
இதையடுத்து முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் உளவுப் பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சில பள்ளிகளில் போலீசார் சோதனையும் நடத்தினர். தீவிர வாகன சோதனையும் நடந்தது.
நேற்றிரவு விடிய விடிய வாகன சோதனை நடந்தது.
அப் பகுதியில் உள்ள பத்மா சேஷாத்ரி, கேந்திரா வித்யாலயா, கிருஷ்ணசாமி மெட்ரிகுலேசன், நிர்மலா மெட்ரிகுலேசன் பள்ளி, வாணி வித்யாலயா பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளிகளும், பஸ் டெப்போவும் கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந நிலையில் ரிஸ்க் எடுக்க விரும்பாத பத்மா சேஷாத்திரி பள்ளி, நிர்மலா மெட்ரிகுலேசன் பள்ளி, வாணி வித்யாலயா பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுவிட்டது.
மற்ற பள்ளிகள் இன்று இயங்கினாலும் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சில பள்ளிகளில் மாணவ-மாணவிகளை பாதியிலேயே பெற்றோர் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications