அங்கீகாரம் பெறாத நர்ஸிங் கல்லூரி-மாணவிகள் போராட்டம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத நர்ஸிங் கல்லூரியை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், காளியாக்காவிளையில் தனியார் நர்ஸிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் பிசியோதெராபி, லேப் டெக்னிஷியன், பார்மஸி, எக்ஸ்ரே டெக்னிஷியன் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு புதிதாக 3 வருட நர்ஸிங் படிப்பு தொடங்கப்பட்டது. இதில் 20 மாணவிகள் சேர்ந்தனர். இந்த மாணவிகள் கல்வி கடன் கேட்டு வங்கிக்கு சென்றுள்ளனர். ஆனால் மாணவிகளுக்கு கல்வி கடன் கொடுக்க வங்கிகள் மறுத்துவிட்டது.
மாணவிகள் காரணம் கேட்டதற்கு, அந்த கல்லூரி இந்தியன் நர்ஸிங் கவுன்சிலில் அங்கீகாரம் பெறவில்லை என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நர்ஸிங் மாணவிகள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் கட்டிய பணம் மற்றும் சான்றிதழ்களை உடனடியாக திருப்பித் தர வேண்டுமென மாணவிகள் வற்புறுத்தினர். களியாக்கவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் மற்றும் விளவங்கோடு தாசில்தார் பார்வதி ஆகியோர் நேரில் சென்று மாணவிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் அட்மிஷன் தொகை ரூ.5,000, மற்றும் மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 பிடித்துக் கொண்டு மீதியை மாணவிகளுக்கு திருப்பி தருகிறோம். அவர்களது டிசி சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் டிசி மற்றும் இதர சான்றிதழ்களை 3 மாதங்கள் கழித்து தருவதாக கூறப்பட்டது.
ஆனால் இதை மாணவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களுக்கு உடனே அனைத்து சான்றிதழ்களும் வேண்டும் என்று கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்த மாணவிகள் முடிவு செய்துள்ளனர்.