எய்ட்ஸ் தினம்: சிவப்பு ரிப்பன் கட்டி வீரர்கள் விளையாடுவர்
துபாய்: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி டிசம்பர் 1 மற்று 2 ஆகிய தேதிகளில் உலகெங்கும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின்போது வீரர்கள், சிவப்பு ரிப்பன் அணிந்து கொண்டு விளையாடுவர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து, ஜிம்பாப்வே - மேற்கு இந்தியத் தீவுகள் ஆகியவை பங்கேற்கும் போட்டிகள், ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 போட்டிகள் அன்றைய தினங்களில் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், அந்த இரு தினங்களிலும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் சிவப்பு ரிப்பன்களை தங்களது கையில் கட்டிக் கொண்டு விளையாடுவார்கள்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் உலகில் அதிகம் பேர் பார்க்கும் போட்டிகளில் ஒன்றாக உள்ளது. உலக அளவில் அதிகம் பேர் இந்த இரு அணிகளின் போட்டிகளைப் பார்க்கிறார்கள்.
எனவே இதைப் பயன்படுத்தி எய்ட்ஸ் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க சிவப்பு ரிப்பன்களை கட்டிக் கொண்டு போட்டிகளில் விளையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஆழப் பரப்ப முடியும் என்று நம்புகிறேன் என்றார்.