பிரிட்டன் மசூதிகளில் இனி பெண்களுக்கும் அனுமதி
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள மசூதிகளில் தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டில் உள்ள மசூதிகள், இமாம்கள் தேசிய ஆலோசனை வாரியம் (மினாப்) என்ற சுயேட்சை அமைப்பு விதித்துள்ளது. மேலும் இனிமேல் பெண்களையும் மசூதிகளில் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள நான்கு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து மினாப் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு இங்கிலாந்தில் உள்ள மசூதிகளில், தீவிரவாதம் புகுந்து விடாமல் தடுக்கவும், இங்கிலாந்தில் தீவிரவாதம் வளராமல் தடுக்கவும் சில புதிய கட்டுப்பாடுகளை மசூதிகளுக்கு விதித்துள்ளது.
10 உத்தரவுகள் அடங்கிய இந்த புதிய கட்டுப்பாடுகள் லண்டனில் வெளியிடப்பட்டன.
அதன்படி, மசூதிகளில் பெண்கள் வழிபடுவதற்கு சுதந்திரமான முறையில் அனுமதிக்க வேண்டும். தீவிரவாத கருத்துக்கள் கொண்ட அமைப்புகளுடன் இளம் முஸ்லீம்கள் இணையாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கட்டாயத் திருமணங்களை இமாம்கள் ஊக்குவிக்கக் கூடாது. வீடுகளில் நடைபெறும் வரதட்சணைக் கொடுமை போன்றவற்றைத் தடுக்க முயல வேண்டும்.
மசூதிகளில் நடைபெறும் மதம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை மினாப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு மினாப் அமைப்பு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள 1600க்கும் மேற்பட்ட மசூதிகளை புதுப்பித்து நவீனப்படுத்தும் பணியை இந்த அமைப்பு மேற்கொள்ளும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
அந்தப் பணியோடு, தீவிரவாதத்தை வேரறுக்க சுயமான சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டு தற்போது அது அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாகவே மசூதிகளில் தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று முஸ்லீம் பெண்கள் குறை கூறி வந்தனர். அதைப் போக்கும் வகையில் தற்போது பெண்களுக்கு அதிக அளவில் மதச்சுதந்திரத்தை அளிக்க மினாப் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இதுதவிர அனைத்து மசூதிகளிலும் பணப் பரிவர்த்தனை, நிதி நிர்வாகம் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றி மேற்கொள்ளவும் மினாப் உத்தரவிட்டுள்ளது.