உண்மைகளை மறைக்கும் ஜெ- ஆற்காடு வீராசாமி தாக்கு
சென்னை: என்ன நடக்கின்றது எனத் தெரியாமல் உண்மைகளை மறைத்து தவறான தகவல்களை சொல்லி மக்களை திசை திருப்ப ஜெயலலிதா முயற்சி செய்வதாக தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க முதல்வர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தொழிற்சாலை அதிபர்களிடம் நான் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்துவோருக்கு எரிபொருள் மீதான வாட்வரியை நீக்குவது, இரவு நேரம் ஆலைகளை இயக்குபவருக்கு மின் கட்டணத்தை குறைப்பது, ஆலைகளை ஞாயிற்றுக்கிழமை இயக்குவது போன்ற பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஹரியானா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலிருந்து 300 மெகாவாட் மின்சாரத்தை பிப்ரவரி மாதத்தில் இருந்து பெற இருக்கிறோம். மத்திய அரசின் சிறப்பு மின் தொகுப்பிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் விரைவில் கிடைக்க இருக்கிறது. நெய்வேலியிலிருந்து வருகிற 10ம் தேதி முதல் 400 மெகா வாட் மின்சாரம் தர ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நானும், முதல்வரும் அக்கறை இல்லாமல் இருப்பதால் தமிழகத்தில் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதிமுக ஆட்சி நடந்த 5 வருட காலத்தில் புதிதாக 2,027 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும் எண்ணூர், தூத்துக்குடி மின்நிலையங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டதாகவும் இப்போது பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இது தவறான தகவலாகும். 2001-2006 வரை அதிமுக ஆட்சியில் கூடுதலாக 348.5 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆனால் ஜெயலலிதா பல மடங்கு மின் உற்பத்தி நடந்ததாக தவறான தகவலை கூறியிருக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்போது தூத்துக்குடி, மேட்டூர், சென்னை, எண்ணூர் ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசின் பாராட்டை தமிழக மின்வாரியம் பெற்றுள்ளது.
அதுபோல காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதற்கான பரிசை ஜனாதிபதியே கடந்த 26ம் தேதி தமிழக மின்வாரிய அதிகாரிகளிடம் வழங்கி இருக்கிறார். இந்த உண்மைகளை மறைத்து ஜெயலலிதா மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்.
கோடை காலத்தில் தான் மின் தட்டுப்பாடு ஏற்படும். இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி முன்னதாகவே குறைந்ததால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நமக்கு தேவையான மின்சாரம் 8,500 மெகாவாட். ஆனால் 7,800 மெகாவாட் மின்சாரம் தான் கிடைக்கிறது. 700 மெகாவாட் குறைந்துள்ளது. கோடை காலத்தில் 1,000 முதல் 1,200 மெகாவாட் வரை மின் தட்டுப்பாடு இருக்கும். அதை தடுப்பதற்கு தான் அரசு இப்போதே முயற்சி எடுத்து வருகிறது.
தென் மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை இருப்பதாக தகவல்கள் வந்தன. அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தம் செய்த வெளிநாட்டு தொழிற்சாலைகளில் பல இயங்கவில்லை என்று ஜெயலலிதா கூறுகிறார். அது தவறானதாகும். பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஜெயலலிதா நேரில் சென்று பார்த்தால் தான் அவருக்கு உண்மை என்னவென்று புரியும் என்று கூறியுள்ளார் ஆற்காடு.