குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 107 சீட் கிடைக்கும்: கருத்துக் கணிப்பு
அகமதாபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 107 சீட்கள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற 11 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜகவுக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன.
மோடியும் காங்கிரஸின் விரிவான தேர்தல் பிரசார உத்திகளை சமாளித்து மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மோடி மீது அதிருப்தியில் உள்ள பாஜக எம்.எல்.ஏக்களை வைத்தும், மோடியின் இமேஜைக் கெடுக்கும் வேலைகளிலும் காங்கிரஸ் தரப்பு கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக பாஜகவுக்கு மயிரிழையில்தான் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. முன்பை விட சற்று முன்னேற்றமான நிலையில் பாஜக உள்ளது என புதிதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஆரம்பத்தில் மோடிக்கு எதிராக இருந்து வந்த கேஷுபாய் படேல் மற்றும் உமாபாரதி ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியிருப்பதால்தான் இந்த நிலை.
ஒரு வார இதழ் நடத்தியுள்ள இந்தக் கருத்துக் கணிப்பில் வாக்குப் பதிவு விகிதம் குறைவாக இருந்தால் அது காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும். அதேசமயம், 45 சதவீதம் வாக்குகள் பதிவானால் அது இரரு கட்சிகளுக்கும் சம வாய்ப்புகளைக் கொடுக்கும். அதாவது இரு கட்சிகளுக்கும் 83 முதல் 99 இடங்கள் வரை கிடைக்கலாம்.
50 சதவீத அளவுக்கு வாக்குப் பதிவு நடந்தால் அது பாஜகவுக்கு சாதகமாக மாறும். அக்கட்சிக்கு 91 முதல் 107 இடங்கள் வரை கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 87 இடங்கள் கிடைக்கலாம்.
55 சதவீத அளவுக்கு வாக்குப் பதிவு இருந்தால் பாஜகவுக்கு 116 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலை விட (122) இந்த முறை பாஜகவுக்கு சில இடங்கள் குறையலாம். கிட்டத்தட்ட 28 தொகுதிகளை அது இழக்கக் கூடும். அதேசமயம், காங்கிரஸுக்கு 30 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியே சிறந்த முதல்வர்:
சிறந்த முதல்வராக மோடியையே மக்கள் தேர்வு செய்துள்ளனர். மோடியே சிறந்த முதல்வராக செயல்பட முடியும் என்று 55 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் மோடிக்கும், பாஜகவுக்கும் பெரும்பான்மை பலம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அதன் வித்தியாசம் சிறிதளவே இருக்கும் என்றும் தெரிகிறது. பிரசாரம் விறுவிறுப்படையும் போது இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.