மலேசியத் தமிழர்களுக்குத் துணையாக இருப்பேன்: கருணாநிதி
சென்னை: மலேசியத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்துவேன் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மலேசியாவில் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராஃப்) அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் வாய்தமூர்த்தி நேற்று சென்னை வந்தார்.
முதல்வர் கருணாநிதியை நேற்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது மலேசியத் தமிழர் பிரச்சினை குறித்து விளக்கி, முதல்வரின் ஆதரவையும் கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதியை நாங்கள் எங்களது மூத்த தந்தையாக கருதுகிறோம். எங்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதிதான். மற்ற தலைவர்களும் எங்களுக்காக ஆதரவு தெரிவித்தனர்.
அனைவரையும் நேரில் பார்த்து நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன். முதல்வரிடம் எங்களது பிரச்சினையை விளக்கினேன். அவரும் பரிவாக கேட்டுக் கொண்டார். மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என மீண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
அதற்கு, எப்போதும் உங்களது போராட்டத்திற்கு நான் துணை இருப்பேன் என்று உறுதியளித்தார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் தாய் வீடு தமிழகம்தான். அந்தத் தமிழகத்தின் முதல்வராக உள்ள கருணாநிதி எங்களுக்கெல்லாம் அரணாக இருப்பார். அவரைப் பார்த்த பிறகு எங்களது பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஐ.நா. சபையை அணுகி முறையிடவுள்ளோம். தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா.விடம் கோரவுள்ளோம் என்றார்.