நதிகளை இணைக்க ரூ.4.44 லட்சம் கோடி தேவை!
டெல்லி: நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க ரூ. 4.44 லட்சம் கோடி பணம் தேவைப்படும் என இதுதொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் இந்தத் தகவலை தெரிவித்தார்.
இதுகுறித்து யாதவ் கூறுகையில், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வுக் குழு, நடத்திய பல்வேறு ஆய்வுகளின் இறுதியில், நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு ரூ. 4.44 லட்சம் கோடி நிதி தேவைப்படும் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற 35 முதல் 40 ஆண்டுகள் வரை காலம் பிடிக்கும்.
நதி நீர் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்ட நடவடிக்கை அறிக்கையையும், கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2வது கட்ட நடவடிக்கை அறிக்கையையும் தாக்கல் செய்தது. அக்குழுவின் பணிகள் இத்துடன் முடிவடைந்து விட்டன.
நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாட்டின் எந்தப் பகுதியும் வறட்சியாலோ அல்லது பெரு வெள்ளத்தினாலோ பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார் யாதவ்.