விசாரணைக்கு வராத நெல்லை இன்ஸ்பெக்டர்-நீதிமன்றம் பிடிவாரன்ட்
தூத்துக்குடி: வழக்கு விசாரணைக்கு வராத இன்ஸ்பெக்டருக்கு நெல்லை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சாயர்புரத்தை சேர்ந்தவர் ராஜவேலு. இவரை மிரட்டியதாக தூத்துக்குடியை சேர்ந்த சந்தனராஜ், கிறிஸ்டோபர் ஆகிய இருவர் மீதும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பரில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது மைதீன் வழக்கு பதிவு செய்தார்.
ஆனால் தான் புகரே கொடுக்கவில்லை, தன்னுடைய கையெழுத்தை வேறு யாரோ போட்டிருக்கிறார்கள் என்று ராஜவேலு நீதிபதி முன்பு கூறிவிட்டார்.
இவ்வழக்கு தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜாராகுமாறு முகமது மைதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் இருந்தார். இதையடுத்து நீதிபதி ஹோமந்த் குமார் அவருக்கு பிடிவாரன்ட் பிறபித்து உத்தரவிட்டார். முகமது மைதீன் தற்போது நெல்லை டவுனில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு அபராதம்:
தூத்துக்குடி, மில்லர்புரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மில்லர்புரம் சமுதாய கூடம் அருகே வந்தபோது அவரை மாரிச்சாமி, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் வெட்டி கொல்ல முயன்றனர். இதில் காயம் அடைந்த தனசேகரன் தட்டாம்பாறை போலீசில் புகார் செய்தார்.
அப்போதைய தட்டம்பாறை இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜாராகுமாறு இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜாராகவில்லை.
இதனால் நீதிபதி ராமச்சந்திரன் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜாரானார்.
அவருக்கு இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 350ன் கீழ் ரூ.100 அபராதம் விதித்து நீதிபதி ராமசந்திரன் தீர்ப்பு கூறினார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் தற்போது வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் பணி புரிந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications