ரேசன் அரிசி கடத்தல்-சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை

சென்னை: புதுச்சேரி ரயில் நிலையத்தில் 2,000 டன் தமிழக ரேசன் அரிசி பிடிபட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் கன ஜோராக நடந்து வருகிறது. இதனை குடிமைப் பொருள் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி புதுச்சேரி ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படவிருந்த 2,000 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அது தமிழக ரேசன் அரிசி என தெரியவந்தது.
இந்த ரேசன் அரிசியை கடத்திய கும்பல் அதை வாங்க தனியார் வங்கியில் ரூ. 10 கோடி கடன் பெறப்பட்டதும் தெரியவந்தது.
இந்த கடத்தலில் ஆளும் தரப்புக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழகம் தவிர புதுச்சேரியும் சம்பந்தப்பட்டுள்ளதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள், விவரங்களையும் சிபிஐ இயக்குனர் விஜய் சங்கருக்கு தமிழக அரசு கடந்த 23ம் தேதியே அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியும் சிபிஐக்குப் பரிந்துரை:
இதற்கிடையே, அரிசி கடத்தல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க புதுச்சேரி அரசும் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கூறுகையில், இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் முகுந்த் மித்திக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
ஆளுநர் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது தொடர்பான கடிதத்தை விரைவில் அனுப்புவார் என நம்புகிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications