போலி பாஸ்போர்ட்டில் பஹ்ரைன் செல்ல முயற்சி - இலங்கை தம்பதி கைது
திருச்சி: இந்திய பாஸ்போர்ட் மூலம் பஹ்ரைன் செல்ல முயன்ற இலங்கை தம்பதி திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). இவரது மனைவி அருணோதயம் (55). ராமச்சந்திரன் 1983ம் ஆண்டு முதல் பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். அருணோதயம், கடந்த 1986ம் ஆண்டு இலங்கையிலிருந்து அகதியாக தமிழகம் வந்தார். மதுரை, மண்மலைமேடு பகுதியில் தங்கியிருந்தார்.
கடந்த 1996ம் ஆண்டு ராமச்சந்திரன், ஒரு டிராவல் ஏஜென்ட்டை அணுகி தனக்கும், தனது மனைவிக்கும் இந்திய பாஸ்போர்ட்டைப் பெற்றுத் தருமாறு கோரினார். இதற்காக தனது இலங்கை பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுத்தார். இதேபோல, அருணோதயத்திற்கு போலி பாஸ்போர்ட் பெற போலியான ஆவணங்களைக் கொடுத்து பெற்றார்.
இதையடுத்து இருவரும் இந்திய பாஸ்போர்ட் மற்றும் போலி பாஸ்போர்ட் மூலம் பஹ்ரைன் செல்ல முயன்றபோது திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் போலீஸாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.