கோடியக்கரை சரணலாயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைவு
தஞ்சாவூர்: நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு இந்த ஆண்டு மழைக் காலத்தில் குறைந்த அளவிலான வெளிநாட்டுப் பறவைகளே வந்துள்ளதாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது கோடியக்கரை. இங்கு பறவைகள் சரணாலயம் உள்ளது. மழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இங்குள்ள சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் பல வந்து குவியும்.
குறிப்பாக ஆர்டிக், அண்டார்டிக் ஆகிய பிராந்தியங்களிலிருந்தும், ரஷ்யா, ஐரோப்பாவிலிருந்தும் அரிய வகை பறவைகள் இங்கு முகாமிட்டிருக்கும்.
அந்தப் பகுதிகளில் வெப்ப நிலை குறைவதன் காரணமாக அங்கிருந்து இங்கு அவை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பறவைகளின் வருகை குறைந்த அளவிலேயே உள்ளதாக கோடியக்கரை பறவைகள் சரணாலய ஆய்வுக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்பவெப்ப நிலை மாற்றமே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
கோடியக்கரை சரணாலயத்தில், மத்திய அரசு நிதியுதவியுடன் புதிய ஆய்வு மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.