தொல்லைக்கு விடை கொடுக்க நெல்லைக்கு படை எடுக்கும் தற்காலிக அரசு ஊழியர்கள்
மதுரை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக அரசு ஊழியர்கள், நெல்லையில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனராம்.
கடந்த அதிமுக ஆட்சியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதையடுத்து ஒரே நாளில், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து இந்தியாவையே அதிர வைத்தார் ஜெயலலிதா.
மேலும், அரசுப் பணிகளில் தேக்கம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தற்காலிக ஊழியர்களின் பணியை நிரந்தரமாக்க வசதியாக, அவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்காலிக ஊழியர்களில் 80 பேர் வயது காரணமாக ஓய்வு பெற்று விட்டனராம். 60 பேர் இறந்து விட்டனர்.
எனவே மீதம் இருப்பவர்களும் எந்தவித பலனும் இல்லாமல் போய் விடக் கூடாது என்பதற்காக தங்களை உடனடியாக நிரந்தரமாக்கக் கோரி பல்வேறு வகையான போராட்டங்களை தற்காலிக ஊழியர்கள் நடத்தி வந்தனர்.
மேலும் பணி நிரந்தரம் தொடர்பாக திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மூலம் திமுக தலைமையை அணுகியுள்ளனர். ஆனால், தற்காலிக ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவராக இருப்பவர் அதிமுகவைச் ேசர்ந்த அன்பழகன் என்பதால், பேச்சுவார்த்தைககான முயற்சி எந்தவித பலனும் இன்றி முறிந்து விட்டதாம்.
தற்போது திமுக முக்கியப் புள்ளி ஒருவரின் மூலம், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை முன்வைக்க தமிழ்நாடு அரசு தற்காலிக ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தேதி வாங்கி விட்டனராம்.
ஆனால் அதற்கு அவர்களுக்கு ஒரு நிபந்தனை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெல்லையில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனையாம்.
இதை ஏற்றுக் கொண்டுள்ள தற்காலிக ஊழியர்கள் சங்கத்தினர், மாநாட்டுக்கு வருகிறோம், நிதியும் கூட தருகிறோம். பதிலுக்கு எங்களுக்கு நீதி தாருங்கள் என்று கோரியுள்ளனராம்.
நெல்லையில் தங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், திமுக இளைஞரணி மாநாட்டுக்குச் செல்ல தற்காலிக ஊழியர்கள் தற்போது தயாராகிக் கொண்டுள்ளனராம்.