ஹிண்ட்ராஃப் புகார்கள் பொய்யானவை-மலேசிய பிரதமர்
சிங்கப்பூர்: மலேசிய குடிமக்கள் யாரையும் - அவர்கள் மலாய் இனத்தவராக இருந்தாலும் சரி, இந்தியர்களாக இருந்தாலும் சரி, சீனர்களாக இருந்தாலும் சரி - மலேசிய அரசு புறக்கணிக்கவில்லை, பாரபட்சமாக நடத்தவில்லை என்று மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறியுள்ளார்.
மலேசியாவின் புதிய தலைநகரான புத்ரஜயா நகரில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் பிரதமர் படாவி பேசினார். அப்போது மலேசியத் தமிழர் விவகாரம் குறித்தும் விரிவாக பேசினார்.
படாவி பேசுகையில், அனைத்து மலேசியர்களுக்கும் வளர்ச்சி, முன்னேற்றம் போய்ச் சேரும் வகையில்தான் அரசு செயல்பட்டு வருகிறது. எனது அரசை வளர்ச்சியின் அடிப்படையில்தான் விமர்சிக்க வேண்டும்.
எந்தவித இனப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுதான் அரசு செயல்படுகிறது. இதில் பாரபட்சம் கிடையாது. அவர்கள் மலாய் இனத்தவர்களாக இருந்தாலும் சரி, இந்தியர்களாக இருந்தாலும் சரி, சீனர்களாக இருந்தாலும் சரி. அனைவரும் அரசுக்கு சமமானவர்களே. அனைத்து இனத்தினரும் இந்த அரசை வளர்ச்சிகளின் அடிப்படையில்தான் பார்க்க வேண்டும்.
மலேசியாவை மிகப் பெரிய வல்லரசு நாடாக மாற்றுவதில் அரசு தீவிரமாக உள்ளது. அமைதியும், நல்லிணக்கமும் மேலும் வலுப்படுவதையே அரசு விரும்புகிறது.
இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராஃப்) அமைப்பு கூறி வரும் புகார்கள் பொய்யானவை என்பதை மலேசியாவின் வளர்ச்சியே விளக்கும்.
ஹிண்ட்ராஃப் அமைப்பு கூறியுள்ள இன ஒழிப்புப் புகார் மிகவும் கடுமையானது. அப்படி நாங்கள் இன ஒழிப்பில் ஈடுபட்டிருந்தால், இந்த நேரம் மலேசியாவில் ஒற்றுமை இருந்திருக்காது, வளர்ச்சி இருந்திருக்காது, அமைதி நிலவியிருக்காது, அரசியல் ஸ்திரத்தன்மையும் இருந்திருக்காது.
மலேசியாவில் ஏழை மக்கள் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஏழைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சுதந்திரமடைந்தபோது நாட்டில் 50 சதவீதம் பேர் ஏழைகளாக இருந்தார்கள். ஆனால் இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் அதை நாம் 5.7 சதவீதமாக குறைத்துள்ளோம் என்றார் படாவி.
மலேசிய ஊரக மற்றும் பிராந்திய வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஜைனல் அபிதின் ஓஸ்மான் கூறுகையில், மண்ணின் மைந்தர்களான மலாய் இனத்தவரை விட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியர்கள் நல்ல நிலையில்தான் உள்ளனர்.
2004ம் ஆண்டு மலாய் இனத்தவரின் சராசரி தனி நபர் மாத வருமானம் 2,711 மலேசியன் ரிங்கிட்டுகளாக இருந்தது. இந்தியர்களின் தனி நபர் மாத வருவாய் 3,456 ரிங்கிட்டுகளாக இருந்தது. சீனர்களின் தனி நபர் மாத வருவாய் 4,437 ரிங்கிட்டுகளாக இருந்தது. இதிலிருந்தே யார் சிறந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications